வாக்களித்த சிறுபான்மையின மக்களுக்கான புதிய அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல்

வாக்களித்த சிறுபான்மையின மக்களுக்கான புதிய அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல்

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் நிறைவடைந்துள்ள நிலையில், எவரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் மாவட்டங்களிலும் அது வெற்றி பெற்றிருக்கிறது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், அது பெற்ற வெற்றி வரலாற்று முக்கியத்துவமுடையதாக இலங்கை அரசியல் வரலாற்றில் பார்க்கப்படுகின்றது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வேறுபாடு இன்றி, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இன்றி, எல்லா மக்களும் இதன் வெற்றியில் பங்களிப்புச் செய்துள்ளனர்.


அடுத்ததாக நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தை தவிர,  ஏனைய சகலவற்றிலும்  தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது.  இந்த வெற்றியில் மிகவும் பிரத்தியேகமாக கவனிக்க வேண்டியது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் மட்டக்களப்பை தவிர ஏனைய மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றியமையேயாகும். மலையக தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்ற மாவட்டங்களிலும் அதே நிலைதான்.


சிங்களவர்களை பெரும்பான்மையாகக்  கொண்ட ஒரு அரசியல் கட்சி தமிழ்த் தேசியவாத அரசியலின் ' கோட்டை யாக ' விளங்கிய யாழ்ப்பாண மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் பெரும்பாலான ஆசனங்களை  முதற் தடவையாக கைப்பற்றியிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பல. ஊழலை ஒழிப்பதிலிருந்து அடிப்படையான அரசியல் மாற்றங்கள் வரை இதில் அடங்கும். “வளமான நாடு அழகான வாழ்க்கை“ என்ற தலைப்பில் அவர்கள் வெளியிட்ட  தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவை விரிவாகப் பேசப்படுகின்றன. அவற்றை நான் இங்கு பட்டியல்படுத்த வேண்டியதில்லை. அவை எல்லாவற்றையும் அடுத்துவரும் அவர்களின் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் அவர்களால் நிறைவேற்ற முடியும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவற்றுள் சுமார் 25% வீதத்தையாவது  அவர்கள் நிறைவேற்றினாலே மக்கள் இவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்ததன் பயனை அடைந்தவர்களாவார்கள் என்பதில் ஐயமில்லை.

1994இல் சந்திரிகா பண்டாரநாயக்க பல வாக்குறுதிகளை அளித்து 62% வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவருடைய பத்தாண்டுகால ஆட்சியில் அவற்றுள் எதையும் அவரால் நிறைவுசெய்ய முடியவில்லை. அதற்குரிய தற்துணிபு அவருக்கு இருக்கவில்லை என்பது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை என்பதையும் ஒரு சமாதானமாகக் கூறலாம்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அந்தச் சிக்கல் இல்லை. மக்கள் பூரணமான ஆணை கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு இவர்களுக்கு எந்தவித காரணமும் இல்லை.

பாரம்பரியமான பிளவுகளை கடந்து தேசிய நோக்கு ஒன்றை வளர்ப்பதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி கண்டிருக்கிறது என்றும் பிரதான அரசியல் கட்சிகளின்  தேர்தல் பிரசாரங்களில் சிறுபான்மைச் சமூகங்களை அழுத்தும் முக்கியமான பிரச்சினைகளுக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை  என்றபோதிலும், வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய  பாகங்களிலும் தேர்தல் முடிவுகள் ஒரேமாதிரியாக அமைந்திருப்பது தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதில் அந்த மக்கள் அக்கறை காட்டத் தொடங்கி விட்டார்கள் என்பதன் வெளிப்பாடு என்றும் அந்த அவதானிகள் கூறுகிறார்கள். 

தமிழ் மக்கள் தேசியவாத சிந்தனைகளின் அடிப்படையிலான தங்களின் நியாயபூர்வ அரசியல் அபிலாசைகளில் அக்கறை காட்டாமல் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு தேர்தலில் ஆதரவை வழங்கினார்கள் என்று கூறமுடியாது.

உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களாக தங்களை பிதிநிதித்துவம் செய்துவந்த தமிழ் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீதான  வெறுப்பையே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பின் மூலம் வெளிக் காட்டியிருக்கிறார்கள்.


இலங்கையின் பல்லினத் தன்மையை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு சமூகத்தின் தனித்துவத்தையும், பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, தாங்கள் அன்னியப்படுத்தப்பட்டவர்கள் என்ற உணர்வுக்கு அவர்கள் ஆளாகாத வகையில் அவர்களையும் அரசியலில் பங்காளிகளாக ஏற்றுக்கொண்டு ஆட்சி நடத்தாத வரையில் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப முடியாது என்பதை இந்த அரசு செயலில் காட்டவேண்டும்.


இன, மத வேறுபாடுகளை கடந்து மக்கள் தனது அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கும் மகத்தான ஆதரவு இனவாதம் மீண்டும் தலையெடுக்காமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க உதவும் என்று ஜனாதிபதி நம்புகிறார் என்றால் அதே இனவாதம் தோற்றுவித்த பிரச்சினைகளுக்கு  காலம் தாழ்த்தாமல்  தீர்வுகளை காண்பது அவசியமானதாகும்.  சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும்  மனக்குறைகளையும்  மதிக்காத  தென்னிலங்கை அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டியது  ஜனாதிபதி தனது குறிக்கோளை அடைவதற்கான முதற் தேவையாகும். 


பெரும்பாலான தமிழ்க்கட்சிகளை நிராகரித்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி ஒரு தெளிவான செய்தியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். அதேவேளை வரலாற்றில் முதற்தடவையாக தேசிய கட்சியொன்றின் பல உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கும் வடக்கு , கிழக்கு மக்களின் பிரச்சினைகளை கையாளுவதில் எத்தகைய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதற்கு  தாங்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களுக்கு கூற வேண்டிய பொறுப்பும் ஜனாதிபதிக்கு இருக்கிறது. 


அதிகாரப்பரவலாக்கல் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் தொடர்பில் ஆழக்காலூன்றிய எதிர்மறையான நிலைப்பாடுகளைக் கொண்ட பெரும்பான்மைச்  நம்பிக்கையை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதற்கான சாதகமான சூழ்நிலையை தென்னிலங்கையில் உருவாக்குவதற்கு ஜனாதிபதி தன்னை அர்ப்பணிக்கவேண்டும். அதற்கான அரசியல் தகுதிலை அவருக்கு முழுமையாக இருக்கிறது. 


புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு முன்னதாக 13 வது திருத்தத்தை அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பது அவரது அரசியல் துணிச்சலுக்கு ஒரு அமிலப்பரீட்சையாக அமையும். அதனால் தங்களுக்கு வரலாறு வழங்கியிருக்கும் அரிய வாய்ப்பை தவறவிடாமல் பெரும்பான்மையின மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு காலந்தாழ்த்தாமல் அரசியல் இணக்கத் தீர்வு ஒன்றைக் காண அந்த தலைவர்கள் முன்வரவேண்டும்.


வீ.பிரியதர்சன்