நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தினை உடனடியாக இரத்து செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவசரகால சட்டத்தின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு கருத்தினையும் வெளிப்படுத்துவதனை அடக்குமுறைக்கு உள்ளாக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மதித்து பாதுகாக்குமாறும், அரசாங்கம் மற்றும் அரச பிரதிநிதிகள் அதனை மீறாது இருப்பதனை உறுதி செய்யுமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.