கல்கிஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வைத்திய நிபுணர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் பணியாற்றிவரும் ஒருவரெனவும், அவர் லெப்டினன்ட் கமாண்டர் தர கடற்படை அதிகாரியொருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸை பொலிஸ், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில், குறித்த சந்தேக நபர் பாணந்துறை, பண்டாரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் ஜூன் 7 ஆம் திகதி முதல் கல்கிஸை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய நேற்று வரை சிறுமியின் தாய் உட்பட 32 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியர், முச்சக்கர வண்டி சாரதி, கார் சாரதி, துறவியொருவர், மாணிக்க கல் தொழிலதிபர், மிஹிந்தலை பிரதேச சபையின் உப தலைவர், கப்பலின் கப்டன், மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர், இணையத்தள உரிமையாளர்கள் இருவர், ஹோட்டல் முகாமையாளர் மற்றும் விளம்பரத்தை வடிவமைத்தவர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் உள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மாலைதீவு பிரஜை மாலைதீவின் முன்னாள் நிதியமைச்சர் என அந்நாட்டு ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
சிறுமியை இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்து அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த மாலைதீவு பிரஜையும் சம்பவத்துடன் தொடர்புடைய ஹோட்டல் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைதானவர்களினால் பிணை கோரப்பட்ட நிலையில், பிணை வழங்குவது சமூகத்தில் குழப்பத்தை தோற்றுவிக்கும் என தெரிவித்து நீதிபதி பிணை கோரிக்கையை மறுத்ததோடு விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்டவர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
த்தோடு, பாடசாலைகள் மூடப்பட்டதால் மாணவர்கள் இணையத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் இவ்வாறான ஆபாச இணையத் தளங்களை அணுகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம சுட்டிக்காட்டினார்.
பாடசாலை ஆரம்பிக்கும் வரையாவது இவ்வாறான இணையத் தளங்களை மாணவர்களால் அணுக முடியாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்தோடு, சி.ஐ.டி மற்றும் பொலிஸார் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்துடன் இணைந்து சிறுவர் ஆபாசத்தை தடுக்கும் திட்டத்தை வகுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.