இலங்கை இந்தியாவிடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய உள்ளது.
இதற்காக புனே சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படுகின்றது.
ஏற்கனவே இந்தியாவினால் வழங்கிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொண்டு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இதில் முன்கள பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேல் மாகாண மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட போவதில்லை என அரசு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தடுப்பூசி உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் 20 சதவீத மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி அளித்துள்ளது.
மேலும் சீனாவும், ரஷியாவும் இலங்கை மக்களுக்கு தடுப்பூசி தானமாக வழங்க முன்வந்துள்ளன.
இதைப்போல இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியா மற்றும் ரஷிய இராணுமும் தடுப்பூசி உதவி அளிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கண்டரியப்பட்டுள்ளமை அங்கு மேலும் பீதியை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் 78,937 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 433 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு தொற்றுக்குள்ளான 72,566 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.