அனுராதபுரம் – பாதெனிய பகுதியில் அமைந்துள்ள கீழ் பலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய தாய்யும் மூன்றரை வயதுடைய மகன் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றும் இருவர் தலைமறைவாகியுள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை அநுராதபுரம் – பாதெனிய சாலையில் உள்ள பஹாலா பாலல்லா பகுதியில் வீதிக்கடவையில் வீதியை கடக்க முற்பட்ட பெண் மற்றும் அவரது குழந்தை மீது ஜீப் ரக வாகனம் ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
குறித் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் 11 பேர் பயணித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த வாகனத்தில் வெற்று பியர் ரின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி மது அருதிய நிலையில் வாகனத்தை செலுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதீக விசாரணைகளை மகாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு – காலி வீதியில் கடந்த 05 ஆம் திகதி மொரட்டுவை எகொடஉயன பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி வீதிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணி தாயொருவர் காயமடைந்துடன் இரண்டுகுழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்று பத்து நாட்களே கடந்துள்ள நிலையில் மேலும் ஒரு விபத்து சம்பவம் பதிவாகியுள்ளமை மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வேகமான மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டுனர்களின் செயற்பாட்டால் விபத்துகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பண்டிகை காலம் காரணமாக மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, குறிப்பாக குழந்தைகளுடன் வீதிகளில் நடந்து செல்லும்போது இவ்வாறான பொறுப்பற்ற ஓட்டுநர்கள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, பண்டிகை காலங்களில் குடிபோதையிலும் வாகனம் செலுத்துபவர்களையும் பொறுப்பற்ற ஓட்டுநர்களையும் கைது செய்ய சிவில் உடையில் பொலிஸார் பணியில் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.