தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு தீவிரமாகி வருகின்றன.
இந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடும் நிலையில் தமிழகத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாலத்தை கொண்ட ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தேர்தலில் புதிதாக களம் இறங்கி உள்ளமை தேர்தல் களத்தை மேலும் சூடுபிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் நாளை மறுநாள் முதல் கமல்ஹாசன் தனது முதல்கட்ட பிரசாரம் நடவடிக்கையை ஆம்பிக்கவுள்ளார்.
திறந்த வேனில் கமல் பிரசாரம் – முதல்கட்ட சுற்றுப்பயணத்தை நாளை மறுநாள் தொடங்குகிறார்.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன் “தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்கிற கோஷத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.
அத்துடன் தேர்தலில் நிச்சயம் 3ஆவது அணி அமையும். தேர்தல் நேரத்தில் கூட்டணிகளில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் கமல்ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது. மதுரையில் இருந்து பிரசார பயணத்தை ஆம்பிக்க உள்ள அவர் 3 கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனிலேயே செல்லும் கமல்ஹாசன் குறிப்பிட்ட இடங்களில் தெருமுனைக்கூட்டங்களில் மக்கள் மத்தியில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடைசி நாளான 16 ஆம் திகதி குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் செய்த பிறகு அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், தி.மு.க.வுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார். தேர்தல் கூட்டணி பற்றி சமீபத்தில் பேட்டியளித்த அவர் கழகங்கள் இல்லாத கூட்டணியை ஏற்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்தின்போது இரண்டு கட்சிகளுக்கும் எதிராக அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தே கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.