உலகம்

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார் : ஆர்ஜன்டீனாவில் 3 நாட்கள் தேசிய துக்கதினம்

ஆர்ஜன்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் தனது 60 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில், கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மறைவையொட்டி ஆர்ஜன்டீனாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆர்ஜன்டீனாவின் முன்னாள் வீரர் மாரடோனா. கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தவர். எல்லாக் காலங்களிலும் தலைசிறந்த வீரராக கருதப்படும் மாரடோனா மாரடைப்பால் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கால்பந்து வரலாற்றில் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் மாரடோனா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில் கலக்கியவர்.


தனது வேகம் மற்றும் விவேகம் நிறைந்த நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கால்பந்து கதாநாயகனாக ஜொலித்தார்.

1986 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற ஆர்ஜன்டீனா அணியின் தலைவராக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர்.

4 உலக கிண்ண போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்றவரான அவர் ஆர்ஜன்டீனா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார்.


பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கழக அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.

10-ம் நம்பர் சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு ஆர்ஜன்டீனா உள்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். அத்துடன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்றார்.

இந்த நிலையில் 60 வயதான மரடோனா கடந்த 2 ஆம் திகதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.


அங்கு அவருக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டு இரத்த உறைவு அகற்றப்பட்டது. ஒரு வாரம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் மரடோனாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அவரது மறைவையொட்டி ஆர்ஜன்டீனாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உள்பட பலரும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

Hot Topics

Related Articles