முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து இரு வயோதிபர்கள் இன்று மாலை வரை உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அவர்கள் இருவரினதும் சடலம் ஒப்படைக்கபட்டுள்ளன.
கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கொழும்பைச் சேர்ந்த 80 வயதுடைய வேலு சின்னத்தம்பி என்பவர் நெஞ்சுவலி காரணமாக இன்று (01.05.2020 )தனிமைப்படுத்தல் முகாமில் மயங்கி வீழ்ந்துள்ளார். இவரை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் நோயாளர் காவு வண்டி மூலம் எடுத்து சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.
இவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்ப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை 5.00 மணியளவில் கேப்பாபுலவு விமானப்படைத்தள கண்காணிப்பு நிலையத்தில் இருந்து 80 வயது மதிக்கத்தக்க மற்றும் ஒருவர் உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருவரின் உயிரிழப்புக்கள் தொடர்பில் சடலங்களிலிருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த இருவர்களின் உடலங்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரின் உயிரிழப்பு தொடர்பிலான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.