உலகம்

கடல்வாழ் உயிரினங்களுக்கு எமனாகும் பிளாஸ்ரிக் – ஒரு கணம் சிந்திப்போமா !

பொலித்தீன் என்பது தற்போது மனிதனுக்கு இன்றியமையாத அத்தியாவசியப் பொருளாக காணப்படுகின்றது. இன்றைய உலகில் மனிதன் எதற்கு எடுத்தாலும் பொலித்தீன் இல்லாது தனது நாளாந்த செயற்பாட்டை நகர்த்த முடியது உள்ளான். இவ்வாறு தனது உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன்கள் நாளடைவில் அவனது சந்ததிக்கே பேராபத்தை தோற்றுவிப்பது மட்டுமல்லது, உலகில் உள்ள உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. குறிப்பாக மனிதனின் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

பொலித்தீன் அற்ற வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க இயலாத அளவுக்கு  அது எமது அன்றாட செயற்பாடுகளில் தவிர்க்க இயலாத ஓரம்சமாக மாறிவிட்டது. இந்த பொலித்தீன் பாவனை அன்றாட வாழ்வுக்குக் கேடு என்று பல விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டும் கூட உலகிலுள்ள நாடுகள் பொலித்தீன் பாவனையை சட்ட ரீதியாக ஒழிக்க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

 

குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன்,ஷொப்பிங் பேக், லஞ்ச் சீட், ரெஜிபோர்ம் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் நாளடைவில் குப்பைக்குசென்று அது பின்னர் கடல்களில் கொட்டப்படுவதாலும் வீசப்படுவதாலும் கடலில் வாழும் பல உயிரினங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன.

 

அருகிவரும் ஆமை இனங்கள், மீனினங்கள் போன்றன கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை உண்பதால் கடல் உயிரினங்கள் உயிரிழக்க நேரிடுகின்றன.

பொலித்தீன் – பிளாஸ்ரிக் கழிவுகள் சிறுசிறு துகள்களாக மாற்றம் கண்ட போதிலும் அது உக்கி அழிவதில்லை. இதனால் சூழலுக்கும், காலநிலைக்கும், ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகின்றது. பிளாஸ்டிக், – பொலித்தீன் கழிவுகள் நிலத்துக்கும், நிலத்தடி நீருக்கும், கடல் நீருக்கும் மாத்திரமின்றி வளிமண்டலத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளன. இதனால் மனிதர் மாத்திரமின்றி விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. தாவரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

அடுத்த 10 வருடங்களில் பெருங்கடலிலுள்ள பிளாஸ்ரிக்கின் அளவு 3 மடங்காக அதிகரிக்குமென பிரிட்டன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.

இது கடலுக்கான ஆபத்து மாத்திரமல்ல, அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாயமாகும். புள்ளிவிபரமொன்றில் மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5 ஆவது இடத்தில் இலங்கையே இருப்பதாக கடல்வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வருடாந்தம் 1.59 மெற்றிக்தொன் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் வீசுவதே கடற்கரை மாசடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் 1975 ஆம் ஆண்டைவிடவும் இலங்கையில் பிளாஸ்ரிக் பயன்பாடு தற்போது 62.5 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனால் இதுவரைக்கும் 8.3 பில்லியன் தொன் பிளாஸ்ரிக் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். கடந்த 65 ஆண்டுகளுக்குள்ளேயே இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பிளாஸ்ரிக் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு பில்லியன் யானைகளின் எடைக்கு நிகரானதாகுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதில் 70 வீதமான உற்பத்திகள் கிராமப்புறங்கள்இ கடல்கள் மற்றும் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலைமை தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டாகும்போது சுமார் 12 பில்லியன் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் எமது சுற்றுச் சூழலில் தேங்கிவிடுமெனவும் உற்பத்தியாகும் பிளாஸ்ரிக் பொருட்களில் 10 வீதத்திற்கும் குறைவானவையே மீள்சுழற்சிக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே உற்பத்தி செய்யப்படுகின்ற அளவுக்கு பிளாஸ்ரிக் பொருட்கள் மீள்சுழற்சி செய்யப்படாமை மிகப்பெரும் குறையாகவே இருக்கின்றது. இலங்கையிலும் அண்மைக் காலங்களில் குப்பைகளை அகற்றுவதில் ஏற்பட்ட நெருக்கடிகளினால் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதேவேளை அவ்வாறு சேகரிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

ஆனால் அத்திட்டத்தின் மூலம் நாட்டில் சேகரிக்கப்படும் சகல பிளாஸ்ரிக் பொருட்களுமே மீள்சுழற்சி செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சேகரிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கழிவுகளைத் தவிர ஏனையவை மண்ணுக்குள்ளும் கடலுக்கும் கொண்டுபோய் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு அரசாங்கம் தரம்பிரித்து கழிவுகளை அகற்றும் போது பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இலங்கையில் கடற்கரையில் இருக்கின்ற கழிவுகளில் 10 வீதமானவை பிரதேசத்தில் இருந்தே அகற்றப்படுவதாகவும் ஏனைய 90 சதவீதமானவை நாட்டின் உள்பாகங்களில் இருந்து கங்கைகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலிருந்தும் கடலுக்குள் அடித்து வரப்படுவதுடன்இ தாய்லாந்து, இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் கடல்களில் ஏற்படுகின்ற நீரோட்டங்கள் மூலமாக இவ்வாறான கழிவுகள் தொலைதூரத்திலிருந்து இலங்கைக் கடற்கரைகளுக்கு இழுத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் பிளாஸ்ரிக் சேர்வதினால் கடலை நம்பி வாழும் உயிரினங்கள் மோசமாக பாதிப்படைகின்றன. சில திமிங்கிலங்கள் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பிளாஸ்ரிக் துண்டுகளை விழுங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து மில்லி மீற்றரை விட குறைவான நீளத்தை கொண்டிருக்கும் சிறிய பிளாஸ்ரிக் துண்டுகள் கடலுக்கும் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும். நுண்ணிய பிளாஸ்ரிக்குகளை உட்கொள்ளும் போது கடல் உயிரினங்களின் செரிமான மண்டலம் பாதிக்கப்படுமெனவும் ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும் திறன் குறைந்துவிடுமெனவும் அமெரிக்க கடல்பெரு மிருகங்கள் அமைப்பின் ஆராய்ச்சியாளர் எலிஸ்டா ஜெர்மானோவ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் அங்கு பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில் ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்ரிக் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 186 கடற் பறவையினங்கள் பிளாஸ்ரிக் உண்பதால் அழியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் 2050 இல் 99 வீத கடற்பறவைகள் பிளாஸ்ரிக்கை உட்கொண்டிருக்கும். கடலில் மீன்களின் எண்ணிக்கையை விட பிளாஸ்ரிக் குப்பைகள்தான் அதிகமிருக்கும். வருடத்திற்கு 10 இலட்சத்திற்கும் அதிகமான கடல் உயிரினங்கள் பிளாஸ்ரிக்கினால் உயிரிழக்கின்றன. கடலில் சேரும் பிளாஸ்ரிக் குப்பைகளில் 80 வீதம் நிலத்திலிருந்தும் 20 வீதம் கடலில் பயணிக்கும் கப்பல்களில் இருந்தும் வருகின்றது.

இலங்கையைப் பெறுத்தவரையில் இவ்வருடம் முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பாவனைக்கான தடை அமுலுக்கு வந்துள்ளது. பொலித்தீன் கழிவுகள் சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியதும்இ குப்பைகளை அகற்றும் கழிவு முகாமைத்துவத்தில் பொலித்தீன் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியதையடுத்தும் அரசாங்கம் இவ்வாறு இறுக்கமான முடிவுகளை எடுத்துள்ளது.

அத்துடன் கடந்த தை மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன், ரெஜிபோர்ம் மற்றும் சொப்பிங் பேக் ஆகியவற்றின் பாவனைக்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை முற்றாகத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நாம் கொழும்பு – 15 காக்கை தீவு பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதிஇ மாத்தறை தெவிநுவர கடற்கரைப் பகுதி மற்றும் மூதூர் பகுதியில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதிக்கு சென்று கடலுடன் கலக்கப்பட்டுள்ள பொலித்தீன் குப்பைகள் குறித்து ஆராய்ந்தோம்.

ஆறுகளில் வீசப்படும் இவ்வாறான பொலித்தீன் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் நாளடைவில் மழைகாலங்களில் ஆற்றுடன் அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலக்கப்படுகின்றன.

இதனால் இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் உயிர்வாழும் கடல்வாழ் உயிரினங்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றது.

 

இது தொடர்பில் சமூக ஆர்வலர் கேஷாயினி தெரிவிக்கையில்,

 

பொலித்தீன் என்பது தற்காலத்தில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் குப்பைகளை கடலில் கொட்டுவதால் கடலில் வாழும் உயிரினங்கள் பெரும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

நாம் முதலில் கடலில் கொட்டப்படும் பிளாஸ்ரிக் பொருட்களையும் பொலித்தீன் கழிவுகளையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அவ்வாறான பிளாஸ்ரிக் பொருட்களையும் பொலித்தீன் கழிவுகளையும் மீள் சுழற்சிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

கடலில் கழிவுகளை கொட்டும் போது ஒரு முறையல்ல இருமுறை சிந்தியுங்கள் என அவர் தெரிவித்தார்.

 

மாத்தறை தெவிநுவரவைச் சேரந்த ராஜா என்ற மீனவர் தெரிவிக்கையில்,

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்  கடலில் கொட்டப்படுவதால் மீனவர்களாகிய நாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

குறிப்பாக கடலில் வாழும் ஆமை, சுறா போன்ற அரியவகை கடல் உயிரினங்கள் அனைத்தும் பொலித்தீன் கழிவுப்பொருட்களை உட்கொள்வதனால் அவை உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் வேளைகளில் சில பெரியவகை அரிய மீனினங்கள் மற்றும் பல கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்ரிக் பொருட்களை உட்கொண்டதனால் உயிரிழந்து கடலில் மிதக்கும் நிலைகளை நான் பல முறை அவதானித்துள்ளேன்.

இவ்வாறு இந்த உயிரினங்கள் மனிதர்களின் செயற்பாடுகள் தாக் காரணம். எனவே ஒவ்வொரு மனிதனும் பிளாஸ்ரிக் பாவனை முற்றாக ஒழிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் என்றார்.

 

 

சமூக ஆர்வலர் கலைச்செல்வன் தெரிவிக்கையில்,

கடலில் கொட்டப்படும் பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகளுக்குள் சென்று அரியவகை கடல் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் போது அவை உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றதுடன் அவற்றின் பரம்பரையே இல்லாது போகின்றது.

இவ்வாறான சிறிய கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலித்தீனை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மிகவும் உணர வேண்டுமென்பதுடன் அது தொடர்பில் சிந்தித்து செயற்படவேண்டும்.

பொலித்தீன் பாவனைகளை மக்கள் மத்தியில் தடைசெய்வதற்கு அரசாங்கம் மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு வேறு மாற்றுத்திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

இவ்வாறு நாம் புள்ளிவிபரங்களை காட்சிப்படுத்துவதால் மாத்திரம் இப்பிரச்சினைக்கு தீர்வினை எட்டமுடியாது. ஆய்வுகளை விடவும் அவற்றை அமுல்படுத்துவதில் அதிகமாக கவனம் கொள்ளுதல் வேண்டும்.

உலகில் ஜப்பான்இ ரஷ்யா, அமெரிக்கா,  கனடா ஆகிய நாடுகளுக்கு நடுவே இருக்கும் வடபசுபிக் கடலில் அதிக குப்பைகள் கொட்டப்படுகின்றன. கடலில் கொட்டப்படும் பிளாஸ்ரிக் பொருட்கள் கிட்டத்தட்ட நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரங்களைவிட 500 மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1200 கோடி கிலோவிற்கு மேலான குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன.

எனவே நிலம் மற்றும் கடல் என்பவற்றை பிளாஸ்ரிக் எனும் நரகத்திடமிருந்து காப்பாற்ற வேண்டிய தேவை மக்கள் சமூகத்திடம் இருக்கின்றது. நிலமும் கடலும் தூய்மையானதாக இருந்தால் மாத்திரமே அதில் வசிக்கும் உயிர்களும் ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கடலில் உயிர் வாழுகின்ற உயிரினங்களுக்கு பிளாஸ்ரிக்கால் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவை பாதுகாப்புக்காக அதிகம் போராட வேண்டிய தேவை இருக்கிறது.

எனவே அரசாங்கமும் நிறுவனங்களும் கழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதோடுஇ அவை கடலுக்குச் செல்வதையும் தடுக்க வேண்டும். பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் தொடர்பாக மக்களுக்கு அன்றாடம் தெளிவுபடுத்த வேண்டும். சுற்றாடலை பாதுகாப்பதற்கான அறிவு, மனப்பான்மை மற்றும் திறமை ஆகியவை மேம்படும் போதே சுற்றுச் சூழலையும் கடல் வளத்தையும் எம்மால் சிறந்த முறையில் பாதுகாக்க முடியும்.

இதேவேளை, தற்போது எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலித்தீன் தடையானது காலத்தின் தேவையாகும். கழிவு முகாமைத்துவத்தின் கீழ் பொலித்தீன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மீள்சுழற்சிக்குட்படுத்தும் அரசாங்க செயற்திட்டங்கள்வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் போது, பொலித்தீனால் சூழலுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து உலகைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அத்துடன் நாட்டிலுள்ள அனைத்தின மக்களும் இன, மத பேதம் பாராது பிளாஸ்ரிக் பாவனையை நிறுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்ரிக் உற்பத்தியையும் பாவனையையும் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி முறையை அதிகரித்தல் என்பனவே இப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வாகும்.

 

 

Hot Topics

Related Articles