நாட்டில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, ஒரே நாளில் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு எத்தியோப்பிய மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு ஆபிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2 ஆவது நாடாகத் திகழ்கிறது எத்தியோப்பியா.
இந்நிலையில், கடந்த நூற்றாண்டில் 30 சதவீதமாக இருந்த எத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு, கடந்த 2000 ஆம் ஆண்டில் 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.
இதனால், நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே தீர்க்க முடியும் என அந்நாட்டு அரசு தீர்க்கமாக நம்புகிறது.
எனவே, மழைகாலத்துக்கு முன்னர் 400 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என பிரதமர் அபிய் அகமது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.
அதன்படி, ‘பசுமை மரபு’ என்ற பெயரில் நாடு முழுவதும் மரக்கன்று நடும் திட்டம் ஒன்றை அந்த நாடு அறிமுகப்படுத்தியது.
நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென பிரதமர் அபிய் அகமது வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 29 ஆம் திகதி ‘பசுமை மரபு’ மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்களும் பங்கேற்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.
இந்தியா கடந்த 2017ம் ஆண்டு, 12 மணி நேரத்தில் 6 கோடியே 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டதே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது, அந்த சாதனையை எத்தியோப்பியா பெரும் வித்தியாசத்தில் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.