நாட்டிலேயே முதன் முறையாக, இந்தியாவில் அரச வைத்தியசாலைகளில் பாதுகாவலர்களாக 8 திருநங்கைகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தில், திருநங்கைகள் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு பெற்று வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, பொலிஸ் துறையில் திருநங்கைகள் பணி வாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது சுகாதாரத் துறையில் காவலர்களாக பணிபுரிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரச வைத்தியசாலையில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவுள்ளனர்.
சமீபத்தில் இவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது,
“பணத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை கவுரவமும், வேலை கிடைத்ததும்தான் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
சமூகத்தில் எங்களை ஏளனமாகப் பார்த்தனர் மோசமாக நடத்தினர். அந்த நிலை இனி மாறும்” என்றனர்.