2019 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர் சம்மேளனம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பெற்றோல் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் பிரிவில் சுங்க வரி அதிகரிப்பு காரணமாக விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலை பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், இது வாகன இறக்குமதி மற்றும் விற்பனை துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி வரி மற்றும் சொகுசு வாகனங்கள் மீதான வரி போன்றவற்றில் அதிகரிப்பு ஏறப்டுத்தப்பட்டுள்ளதால், புகழ் பெற்று; காணப்படும் வாகன வர்த்தக நாமங்கள் மற்றும் மாதிரிகளின் விலைகள் நேற்று (06) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் பின்வரும் வாகனங்களின் விற்பனை விலைகள் அதிகரித்துள்ளன. சுசுகி அல்டோ ரூ. 150,000, டைஹட்சு மிரா ரூ. 150,000, சுசுகி ஜிம்னி ரூ. 150,000, சுசுகி வெகன் ஆர் ரூ. 250,000, சுசுகி ஸ்பேஷியா ரூ. 250,000, டொயோடா விட்ஸ் ரூ. 250,000, சுசுகி ஸ்விஃவ்ட் ரூ. 250,000, ஹொண்டா சிவிக் ரூ. 250,000, அவுடி ஏ1 ரூ. 250,000, சுசுகி கிரான்ட் விடாரா ரூ. 250,000, டொயோடா அக்சியோ ஹைபிரிட் ரூ. 525,000, ஹொன்டா வெசல் ரூ. 525,000, டொயோடா சிஎச்.ஆர் ரூ. 540,000, டொயோடா பிரெமியோ ரூ. 675,000, டொயோடா அலியன் ரூ. 675,000 மற்றும் ஹொன்டா சிஆர்வி ரூ. 675,000.
விலைத் தாக்கம் தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் ரஞ்ஜன் பீரிஸ் கருத்துத்தெரிவிக்கையில்,
“அரசாங்கத்தின் புதிய வரி அறவீடு தொடர்பில் நாம் அதிகளவு கவலை கொண்டுள்ளோம். இதனால் வாகன விற்பனை விலை அதிகரித்துள்ளதுடன், பொது மக்கள் அவற்றை கொள்வனவு செய்வதில் காண்பிக்கும் நாட்டம் குறைவடையும், இதனால் துறைக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கும்.” என்றார்.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது சொகுசு வரி அறவிடப்பட்டுள்ளமை தொடரபிலும் சம்மேளனம் கவனம் செலுத்தியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள வரி அறவீடு, உற்பத்தியாளரின் விலையின் CIF பெறுமதி மீது அறவிடப்படுகிறது. எனவே, அசல் விலையின் மீது வரி விதிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
உதாரணமாக, 3.5 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வாகனங்களுக்கு மேலதிகமாக “சொகுசு வரி” அறவிடப்படும். இது “இறக்குமதி வரி” ஆகும், இதனால் வாகனங்களின் விலை பெருமளவு அதிகரித்து, துறைசார்ந்த நிறுவனங்களின் நிலைத்திருப்புக்கு பாதிப்பாக அமையும்.
பீரிஸ் தொடர்ந்து தெரிவிக்கையில், “சொகுசு வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையின் பின்புலத்தை நாம் அறிந்துள்ள போதிலும், துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிமுறைகளை அறிமுகம் செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுக்கிறோம்.” என்றார்
2000 கிலோ கிராம்களுக்கு குறைந்த கொள்ளளவு திறன் கொண்டபடி” ட்ரக் வகைகள் மீதான உற்பத்தி வரி ரூ. 100,000 இனால் குறைந்துள்ள போதிலும், தற்போதைய விலைகள் மற்றும் நாணயமாற்று விகிதங்கள் போன்றவற்றவற்றுடன் ஒப்பிடும் போது, புதிய விலையில் பெருமளவு தாக்கத்தை ஏற்ப்படுத்தாது என தாம் கருதுவதாக சம்மேளனம் குறிப்பிட்டது.
தற்போதைய வரவுசெலவுத்திட்ட அளவு கோல்களின் பிரகாரம் loan-to-value (LTV) விகிதத்தை மீளாய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் சம்மேளனம் கோரிக்கைவிடுத்துள்ளது.
தற்போதைய இந்த பெறுமதி 50 வீதமாக அமைந்துள்ள நிலையில், வாகன உற்பத்தியாளர்களை கவர்வதற்கு இது முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இந்த பெறுமதியை 75 வீதமாக உயர்த்துவதனூடாக, தற்போது காணப்படும் பொருளாதார சூழலில், பெருமளவு பொது மக்களுக்கு மோட்டார் வாகனமொன்றை கொள்வனவு செய்ய உதவியாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.