உலகம்

கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல 15 நாட்டுப்படகுகளுக்கு அனுமதி..!

“கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு, 15 நாட்டுப்படகுகளில் 225 பேர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என, கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:

“ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில், இந்தியா – இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி, இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள நாட்டுப்படகில் செல்ல சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதி வழங்க வேண்டும்’ என, நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையேற்று, ‘விசைப்படகுகளைப் போல நீளமாக உள்ள 15 நாட்டுப்படகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு படகில் 15 பேர் வீதம், 15 படகுகளிலும் மொத்தம் 225 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். இந்த படகுகள் அனைத்தும், ராமேஸ்வரத்தில் இருந்து மட்டுமே புறப்பட்டுச் செல்லவேண்டும்’ என்ற விதிகளுடன், 15 நாட்டுப்படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 63 விசைப் படகுகளில் 2,200 பேர் செல்கின்றனர். நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, கடலோர பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலின்படி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Hot Topics

Related Articles