சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
குற்றச்சாட்டு எழுந்த காலத்தில் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரான சனத் ஜெயசூர்யா தேர்வுக்குழு தலைவராக இருந்தார். இவரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்த முடிவு செய்தது.
சனத் ஜெயசூர்யா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அத்துடன் முக்கியமான ஆவணங்களை மறைத்து விட்டதுடன், ஆதாரங்களை அழித்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவர் எந்தவொரு கிரிக்கெட் நடவடிக்கையிலும் செயல்பட முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.