உலகம்

இந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய தற்கொலை தாக்குதல் ; 46 இந்திய இராணுவ வீரர்கள் பலி

விடுமுறைக்காகச் சென்ற இந்திய துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 46 பேர் உடல் சிதறிப்பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்திய துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் சமீப காலங்களில் நடந்த மோசமான, மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

காஷ்மீர் மாநிலத்தில் துணை இராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர்.

அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும் உடன் சென்றன.

ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் சென்றபோது தற்கொலை குண்டுதாரியொருவர் வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து இராணுவ வீரர்கள் சென்ற பஸ் ஒன்றின் மீது மோதி வெடிக்கவைத்துள்ளார்.

இதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தது. பஸ்சில் இருந்த 76 ஆவது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் அனைவரும் உடல் சிதறி விழுந்தனர். அருகில் சென்ற ஏனைய வாகனங்களும் சேதமடைந்தன.

இந்த தற்கொலை தாக்குதலில் 44 துணைநிலை இராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. படுகாயமடைந்து கிடந்த வீரர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்த கொடூரத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

இந்திய துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் சமீப காலங்களில் நடந்த மோசமான, மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி காஷ்மீரில் உரி இராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புதான் மேற்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவித்திருந்தன.

2016 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி பாலமோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோர்ட்டு இராணுவ தளத்தில் 6 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இராணுவ வீரர்கள், ஒரு அதிகாரி உயிரிழந்தனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி ஜம்முவில் உள்ள காலுசாக் இராணுவ பாசறையில் 3 பயங்கரவாதிகள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 36 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுவரை நடந்துள்ள தாக்குதல்களில் தற்போது நடந்த தற்கொலை தாக்குதல் மிக மோசமாகதான கருதப் படுகிறது.

ஒரே நாளில் 44 இந்திய ராணுவ வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles