உலகம்

கல் மாலை அணிந்து வந்து கலெக்டரிடம் மனு..!

கல் குவாரியை மூட வலியுறுத்தி கழுத்தில் ஜல்லி கற்களை மாலையாக அணிந்து மனு கொடுக்க வந்தவர்களால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம் தெப்பக்குளத்துப்பட்டி அருகேயுள்ள தாதன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிபாலன் தலைமையில் ஜல்லி கற்களை கயிற்றில் கட்டி மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதைப் பார்த்த கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது;

“ரெட்டியார்சத்திரம் – தாதன்கோட்டை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இதில், அரசு அனுமதித்த அளவைவிட கூடுதலாக பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், பாறைகளை உடைக்க வைக்கப்படும் வெடிகளால் ஏற்படும் பயங்கர சத்தத்தால் எங்கள் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அதேபோல், பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிக்கும் கால் நடைகளும் நோயால் பாதிக்கப் படுகின்றன. இதே நிலை நீடித்தால், அங்கு வசிக்கும் மக்கள் இறக்கும் நிலை அபாயம் உள்ளது.


அத்துடன், குவாரிக்கு வரும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதை தட்டிக்கேட்டால், கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தோம். ஆனால், இன்றுவரை நடவடிக்கை இல்லை.

எனவே, எங்கள் பிரச்னையை மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜல்லி கற்களை மாலையாக அணிந்து, கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம். இந்த பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல, இதைவிட எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்றனர். இதையடுத்து, அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க பொலிஸார் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Hot Topics

Related Articles