பங்களாதேஷில் ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாத சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பங்களாதேஷில் 1920 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது.
இந்த நிலையில் 1920 ஆம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய சட்ட வரைவு ஒன்றை பங்களாதேஷ் அரசு உருவாக்கி உள்ளது.
இது ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படுகிறது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது.
இதனை மீறுவோருக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுவது மற்றும் மத சடங்குகளுக்காக விலங்குகளை பலி கொடுப்பது போன்றவற்றை குற்றமாக இந்த புதிய சட்டம் கருதவில்லை.
இந்த சட்டம் விரைவில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.