உலகம்

ஆசியக் கிண்ண கால்பந்து – ஜப்பானை வீழ்த்தி கட்டார் சம்பியனானது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்ற 17 ஆவது ஆசியக் கிண்ண கால்பந்து போட்டியில் ஜப்பானை வீழ்த்தி கட்டார் சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.


17 ஆவது ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.

24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா காலிறுதியை தாண்டாது வெளியேறியது.


ஜப்பானும், கட்டாரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இவ்விரு அணிகளில் சம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது.

விறுவிறுப்பான இந்த போட்டியில் 12 ஆவது நிமிடத்தில் கட்டார் வீரர் 22 வயதான அல்மோஸ் அலி, அந்தரத்தில் பல்டி அடித்தபடி பிரமாதமாக கோல் அடித்தார்.

 

நடப்பு தொடரில் அவரது 9 ஆவது கோல் இதுவாகும். ஆசிய கிண்ண போட்டியில், ஒரு தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.


27 ஆவது நிமிடத்தில் கட்டார் அணி மற்றொரு கோலை திணித்தது. அந்த அணியின் அப்டேலாஜிஸ் ஹாதிம் இடது காலால் உதைத்து பந்தை வலைக்குள் அனுப்பினார். பதிலடி கொடுக்க போராடிய ஜப்பான் அணி 69 ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டது. பிறகு மேலும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர ஜப்பான் முயற்சித்த நிலையில், 83 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கட்டார் வீரர் அக்ரம் ஹசன் ஆபிப் கோலாக்கி எதிரணியை நிலைகுலைய வைத்தார்.

இறுதியில் கட்டார் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சம்பியன் ஜப்பானை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.

63 ஆண்டு கால ஆசியக் கிண்ண கால்பந்து வரலாற்றில் கட்டார் அணி மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றியின் மூலம் 2021 ஆம் ஆண்டில் நடக்கும் ‘பிபா’ கான்பெடரேஷன் கிண்ண போட்டிக்கும் கட்டார் அணி தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles