வைத்தியசாலையில், கடந்த 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய ஆண் தாதியொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில், 29 வயதான பெண் ஒருவர், 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இந்த நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் அந்த பெண் கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் 29 ஆம் திகதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. எனவே அந்த கோணத்தில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.
உண்மையை கண்டறிவதற்காக வைத்தியசாலையில் பணியாற்றும் அனைத்து ஆண்களும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் அந்த வைத்தியசாலையில் ஆண் தாதியாக பணியாற்றும் நாதன் சுதர்லாந்த் (36) என்பவர் தான், கோமாவில் இருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கினார் என்பது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து பீனிக்ஸ் நகர பொலிஸார் அவரை கைது செய்தனர்.