ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் விற்பனை சரிந்துள்ளதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் வகைகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்து, உலகம் முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுகமானது முதல் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலகட்டங்களில் புதிய ஐ-போன் வகைகளின் விற்பனை சரிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களில் இல்லாத அளவு, தனது வருவாய் இலாப கணிப்பை முதல் முறையாக குறைத்துள்ளது.
ஐ-போன் விற்பனை குறைந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வியாபாரம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
இந்நிலையில் ஐ-போன் விற்பனை சரிவை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆப்பிள் முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் விடுமுறை காலாண்டு வாக்கில் ஆப்பிள் வருவாய் கணிப்பு மாற்றப்படுவதாக தெரிவித்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஐபோன்களின் விற்பனை சரிந்தது தான், குறிப்பாக சீனாவில் ஐபோன் விற்பனை குறைந்திருக்கிறது.
காலாண்டில் வருவாய் கணிப்பு குறைந்திருப்பது பின்னடைவாக இருந்தாலும், நமது சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வணிகம் மூலம் வரலாற்று சிறப்புமிக்க வருவாய் கிடைத்திருக்கிறது. ஐபேட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.
இதேபோன்று ஐபோன் ஆக்டிவேஷன்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்மஸ் தின சாதனையை முறியடித்திருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மேற்கு ஐரோப்பா, ஜேர்மனி, இத்தாலி, மற்றும் கொரியா, வியட்நாம் போன்ற ஆசிய பசிபிக் பகுதிகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
புதிய ஐபோன்களின் மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கண்டுபிடிப்புகளால் நாம் பெருமை கொள்ள முடியும். இதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. முதல் காலாண்டில் ஐபோன் விற்பனையில் சாதனை படைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
வெளிப்புற சூழல் நமக்கு அழுத்தம் தரலாம், எனினும் அவற்றை நாம் விலக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த நிலை மாறும் வரை நாம் காத்திருக்கவும் கூடாது. இந்த சூழல் நாம் கற்றுக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், நம் பலத்தை ஒன்று திரட்டி ஆப்பிள் குறிக்கோளை நிலைநிறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த காலாண்டு விற்பனை பற்றி விவாதிக்க ஆப்பிள் ஊழியர்களுக்கு டிம் குக் தனது கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.