திருவாரூர் சட்டப்பேரவைக்கான இடைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் அச்சப்படுகின்றன என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,
“நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்பிக்கள் நாடகம் நடத்தி வருகின்றனர். இந்த நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள். பணமதிப்பிழப்பு செய்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதி காத்துவந்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது மக்களவை தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து பொதுமக்களைச் சமாதானப்படுத்துவதற்காக அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவுடன் அமமுகவை இணைப்பது தொடர்பாக யாருடனும் நான் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எந்த காலத்திலும் துரோகிகளுடன் சேரமாட்டேன். மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பல கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், மக்களவைத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும்.
தற்போதைய சூழலில் ஆர் கே நகர் தொகுதிஇடைத்தேர்தலைப் போல் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்தலை ஒரு சில கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் அமமுக தேர்தலை வரவேற்கிறது. மக்கள் யார் பக்கம் என்பதை இடைத்தேர்தல் முடிவு வெளிப்படுத்தும். இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்வதற்காகவே சசிகலாவை சந்தித்தேன். அவரது ஆலோசனையின் படி தஞ்சாவூரில் இன்று மாலை திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவிப்போம்.” என்றார்.