இலங்கையில் கிரிக்கெட் தொடர்பான ஊழல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை தனது அதிகாரியொருவரை இலங்கையில் பணியாற்றுவதற்காக நியமனம் செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை தடுபாயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறித்து தனது டுவிட்டர் செய்தியில் ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில்,
நான் சர்வதேச கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுடன் சாதகமான சந்திப்பொன்றை மேற்கொண்டேன்.
அவர்கள் என்னிடம் அறிக்கையொன்றை கையளித்தனர். அமைச்சர் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக சிரேஸ்ட அதிகாரியொருவரை நியமிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் ரிச்சட்சனை நான் விரைவில் சந்திக்கவுள்ளேன்.
இதேவேளை 2019 உலகக் கிண்ணப்போட்டிகள் வரை இலங்கை கிரிக்கெட்டினை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாககுழுவொன்றை நியமிப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை அமைச்சர் மேற்கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.