உலகம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பல வசதிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய தான் உள்ளிட்ட அனைத்து பிரதேச செயலாளர்களும் எந்தவொரு அனர்த்த நிலைமைக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் சுமார் 2000 பேருக்கு நலன்புரி முகாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடியிருந்தாலும் இன்று (26) காலை முதல் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக மக்கள் மீண்டும் நலன்புரி நிலையங்களுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் 18,000 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் சமைத்த உணவுகள் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்கள், சுகாதார வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எந்தவித குறைபாடுகளும் ஏற்படாத வண்ணம் தேவையான வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஜனாதிபதியின் பணிப்புரை விடுத்துள்ளதுடன், அதற்கமைய மாவட்டத்தில் 17 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான நிதி வழங்கும் நடவடிக்கைகளின் முதலாம் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு 10,000 ரூபா வீதம் வழங்கவுள்ளதுடன், ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்ததன் பின்னர் 250,000 ரூபாய் வரையான தொகையை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள், விற்பனை நிலையங்கள், கிணறுகள் மற்றும் கழிவறைகளை சுத்திகரிப்பதற்கான செயற்திட்டமொன்றை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நட்டஈடு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது ஏக்கருக்கு 40,000 ரூபா வீதம் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் பாதிக்கப்படாதவர்களுக்கு அவர்கள் மீண்டும் தமது வீடுகளில் குடியேறும் போது உணவு தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

இராணுவத்தினரால் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களை ஆபத்தான இடங்களிலிருந்து நீக்கி மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

57 பிரிவுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்த நலன்புரி நடவடிக்கைகளுக்காக 300 – 400 இராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை கப்பற் படையினரும் 06 குழுக்களாக நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் நிர்க்கதியான சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தற்போது மீட்க்கப்பட்டுள்ளதுடன், இலங்கை விமானப் படையினர் அவதானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், ஆபத்தான பிரதேசங்களில் பணியாற்றிவரும் தரைப்படையினருக்கு உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

Hot Topics

Related Articles